|
முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குச்
செல்லல்: 1- சூரியன் உதயமாகும் முன்பு முஸ்தலிஃபாவிலிருந்து
மினாவுக்குச் செல்ல வேண்டும். ஜமராவில் கல்லெறிதல்:
2-
மினாவை வந்தடைந்ததும் பெரிய ஜமராவில் ஏழு கற்களைத் தக்பீர் கூறி
ஒவ்வொன்றாக எறிய வேண்டும். ஜமராவை முன்னோக்கி, வலது புறம் மினாவும்
இடது புறம் மக்காவும் இருக்குமாறு நின்றுகொண்டு கற்களை எறிவது
சுன்னத்தாகும். அங்கு வந்ததும் தல்பியாவை நிறுத்தி விட வேண்டும்.
குர்பானி கொடுத்தல்:
3-
பிறகு பலிப்பிராணியைப் பலியிட வேண்டும். அல்லது அந்தப் பொறுப்பைத் தமது
சார்பாக பிறரிடம் ஒப்படைக்க வேண்டும். பலியிடுதல் தமத்துஃ மற்றும்
கிரான்காரர்களுக்கு வாஜிபாகும். பலியிடுவதற்கான கால அவகாசம் துல்ஹஜ்
13-ஆம் தினத்தின் மஃரிப் வரை உண்டு. தமத்துஃ, கிரான்காரர்கள்
பலியிடுவதற்கு இயலாமற்போனால் அதற்குப் பகரமாக பத்து நோன்புகள் நோற்க
வேண்டும். அதுவும் ஹஜ்ஜுடைய நாட்களில் அரஃபாவுக்கு முன்பு மூன்று
நாட்களும் - அதுவும் இயலாவிட்டால் அய்யாமுத் தஷ்ரீக்கில் (11,12,13
ஆகிய நாட்களில்) நோற்கலாம் - வீட்டிற்குத் திரும்பிய பின்பு ஏழு
நாட்களும் நோற்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: 'யார் பலிப்பிராணியைப்
பெறவில்லையோ அவர் ஹஜ்ஜின் நாட்களில் மூன்று தினங்களும்
குடும்பத்தாரிடம் திரும்பிய பின்பு ஏழு தினங்களும் நோன்பு நோற்க
வேண்டும். இதுவே பரிபூரணமான பத்து தினங்களாகும்.'
(2:196).
முடி இறக்குதல்: 4- பலியிட்ட பிறகு
தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது.
இத்துடன் இஹ்ராமிலிருந்து முதல் விடுதல் ஏற்படும். இப்போது இஹ்ராமில்
தடுக்கப்பட்ட அனைத்தும் அனுமதிக்கப்படும், உடலுறவைத் தவிர. ஹஜ்ஜின்
தவாஃபு:
5- பிறகு மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுடைய தவாஃபை -
தவாஃபுல் இஃபாளாவைச் செய்ய வேண்டும். அதாவது கஃபாவை ஏழு
முறை சுற்றி வர வேண்டும். இதில் விரைதலோ வலது தோள்பகுதியைத் திறந்து
வைத்தலோ கிடையாது. இந்தத் தவாஃபு ருக்னாகும்.
6- தவாஃபுக்குப்
பின்பு இரு ரக்அத்துகள் முடிந்தால் மகாமு இப்ராஹீமில் அல்லது பள்ளியின்
எங்கு வேண்டுமானாலும் தொழ வேண்டும். பிறகு தமத்துஃ செய்பவர்கள் ஸஃபா
மர்வாவுக்கிடையே ஸயீ செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் முதலில் செய்த
ஸயீ உம்ராவுக்குரியது. ஆனால் இஃப்ராத் மற்றும் கிரான் செய்பவர்கள் ஒரு
ஸயீ செய்தால் போதும். அதாவது தவாஃபுல் குதூமுக்குப் பிறகு அவர்கள் ஸயீ
செய்திருந்தால் தவாஃபுல் இஃபாளாவுக்குப் பிறகு தனியாக வேறொரு ஸயீ
தேவையில்லை.
7- இஹ்ராமிலிருந்து முழுமையாக விடுபடுவது மூன்று
காரியங்களின் மூலமாக அமையும்: பெரிய ஜமராவில் கல்லெறிதல், முடியை
மழித்தல் அல்லது சிறைத்தல், தவாஃபுல் இஃபாளாவுடன் கூடிய ஸயீ (முன்னரே
செய்யவில்லையாயின்) இம்மூன்றும் முடிந்துவிட்ட பிறகு இஹ்ராமின் மூலம்
தடுக்கப்பட்ட உடலுறவு உட்பட அனைத்தும் அனுமதிக்கப்படும். முக்கிய
குறிப்புகள்:
-
(1) மேற்கண்ட வரிசைக்கிரமம் சுன்னத்தான முறையாகும்.
இதைப் பேண இயலாமற்போனாலும் எந்தக் குற்றமுமில்லை. முடி வெட்டுவதற்கு
முன்பு தவாஃபு செய்தாலும் கல்லெறிவதற்கு முன்பு முடிவெட்டினாலும்
தவாஃபுக்கு முன்பு ஸயீ செய்தாலும் இவ்வாறு வரிசை முறையில் மாற்றம்
நிகழ்ந்தால் எந்தக் குற்றமுமில்லை.
-
(2) பத்தாம் நாள் கல்லெறிய வேண்டிய நேரம் பொதுவாக
சூரியன் உதயமான பிறகுதான் துவங்குகின்றது. ஏனெனில் இப்னு அப்பாஸ்
(ரழி) அவர்கள் கூறியதாவது: முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில்
நாங்கள் அப்துல் முத்தலிப் கோத்திரத்தைச் சேர்ந்த சிறுவர்களை
முற்கூட்டியே ஜமராவின் அருகில் கொண்டுபோயிருந்தோம். அப்போது அவர்கள்
எங்களின் தொடைகளைச் சுரண்டி(க் கல்லெறிய அனுமதி கேட்டு)க்
கொண்டிருந்தபோது, குழந்தைகளே! சூரியன் உதிக்கும் வரை
கல்லெறியக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால்
பெண்களும் பலவீனமானவர்களும் மினாவை வந்தடையும் இரவின் கடைசிப்
பகுதியிலேயே கல்லெறியலாம். ஏனெனில் இது பற்றி அஸ்மா (ரழி) அவர்களின்
அடிமை அறிவிப்பதாவது: அஸ்மா (ரழி) அவர்கள், முஸ்தலிஃபாவில் இறங்கிய
பிறகு சற்று நேரம் தொழுதுவிட்டு சந்திரன் மறைந்துவிட்டதா? என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றதும் மீண்டும் சற்று நேரம் தொழுதுவிட்டு
சந்திரன் மறைந்துவிட்டதா? என்று மீண்டும் கேட்டார்கள். நான் ஆம்
என்றதும் புறப்படுங்கள்! என்று கூறிவிட்டு புறப்பட்டு ஜமராவுக்கு
வந்து கல்லெறிந்துவிட்டு தமது இருப்பிடத்திற்கு வந்து ஃபஜ்ரு
தொழுதார்கள். பிறகு நான், என்ன இது, பொழுது விடிவதற்குள் இவ்வாறு
செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கவர், பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
அனுமதியளித்துள்ளார்கள் எனக் கூறினார் (புகாரீ, முஸ்லிம்)
-
(3) பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கான நேரம் சூரியன்
உச்சியிலிருந்து சாயும் வரை நீடிக்கும். அதற்குள் எறிய இயலாத
சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குப் பிறகும் ஏன் இரவிலும்கூட
எறியலாம்.
-
(4) முடியைக் குறைக்கும்போது தலையின் எல்லாப்
பகுதியிலிருந்தும் குறைக்க வேண்டும். பெண்களின் தலை முடியை ஒன்று
சேர்த்து அதன் நுனியில் நகக்கண் அளவுக்கு வெட்ட வேண்டும்.
|